`மதராஸி’ படத்தின் கதை இதுதான்..இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பகிர்ந்த அதிரடி தகவல்

சென்னை,
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.
நேற்று நடிகர் சிவகார்த்திகேயனின் 40-வது பிறந்த நாளை முன்னிட்டு ‘எஸ்கே23’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதன்படி, இந்த படத்திற்கு தமிழில் ‘மதராஸி’ என்றும் இந்தியில் ‘தில் மதராஸி’ என்றும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு இந்த பெயரை வைத்ததற்கான காரணத்தை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘வட இந்தியாவில் உள்ள மக்கள் நம்மை எப்படி பார்க்கிறார்கள் என்பதுதான் `மதராஸி’ படத்தின் கதை. வட இந்திய மக்கள் தென்னிந்திய மக்களை குறிப்பிடும் வார்த்தைதான் `மதராஸி’. அதனால்தான் இப்படத்திற்கு `மதராஸி’ என பெயர் வைக்கப்பட்டது’ என்றார்.