போதைப்பொருள் வழக்கு: தலைமறைவாக இருந்த நடிகர் கிருஷ்ணா சிக்கினார்

சென்னை,
போதைப்பொருள் விவகாரத்தில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திரை உலக பிரபலங்கள் பலர் மீது போலீசாரின் சந்தேக பார்வை வீச தொடங்கி இருக்கிறது. இதையடுத்து திரை உலகில் பலர் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.
போதைப் பொருள் சப்ளை செய்ததாக கைதான பிரதீப் வாக்குமூலத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சப்ளை செய்ததாக கூறி உள்ளார். இதையடுத்து போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, நடிகர் கிருஷ்ணாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் திட்டமிட்டனர். இதற்காக கிருஷ்ணாவுக்கு நேற்று போலீசர் சம்மன் அனுப்பினர். ஆனால், கிருஷ்ணா செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார். 2 நாட்களாக போலீசார் தேடி வந்தநிலையில், தனிப்படை போலீசார் ஸ்ரீகிருஷ்ணாவை தேடி பிடித்துள்ளனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், அவரிடமும் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை மேற்கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரத்த பரிசோதனையில் ஸ்ரீகிருஷ்ணா (கொகைன்) போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானால் ஸ்ரீகாந்தை போல் ஸ்ரீகிருஷ்ணாவையும் போலீசாரால் கைது செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.