"பைசன்" படம்: மாரிசெல்வராஜ் சார் இறங்கி சம்பவம் பண்ணிருக்காரு- துருவ் விக்ரம்

சென்னை,
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பின்னர் இவர் ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமடைந்தார்.
இதைத் தொடர்ந்து ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற 17-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படக்குழு புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் துருவ் விக்ரம் பேசியது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “என் பெயர் துருவ், நான் இதுவரை இரண்டு படங்கள் பண்ணி இருக்கேன். நீங்க அந்த இரண்டு படங்களையும் பார்க்கலைன்னாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா பைசன் படத்த நீங்க பார்க்கணும். நான் இந்த படத்துக்காக என் 100 சதவீத முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கேன். மாரிசெல்வராஜ் சார் இறங்கி சம்பவம் பண்ணிருக்காரு. நீங்க குடும்பத்தோடயோ, காதலியோடயோ, காதலனோடயோ போகலாம், ஆனா நீங்க எல்லாரும் நிச்சயம் இந்த படத்த பாக்கணும்” என்றார்.