‘புஷ்பா 2’ பட வெளியீட்டின்போது பெண் உயிரிழந்த விவகாரம்: அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் சம்மன், Woman’s death during ‘Pushpa 2’ release: Allu Arjun summoned again,

ஐதராபாத்,
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இந்தப் படம் சாதனை படைத்து வருகிறது. முன்னதாக இந்தப் படத்துக்கு தெலுங்கானா அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது.
அதன்படி கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த சிறப்புக் காட்சியைப் பார்க்கச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக நடிகர் அல்லு அர்ஜுன் அறிவித்திருந்தார். இதனிடையே கடந்த 13-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து அவர் வெளிவந்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை காலை 11 மணிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.