”புஷ்பா” பட இயக்குனரின் மகளை கவுரவித்த தெலுங்கானா முதல்-மந்திரி|Telangana cm revanth reddy honoured sukumar daughter sukriti veni

ஐதராபாத்,
புஷ்பா பட இயக்குனர் சுகுமாரின் மகள் சுக்ரிதி வேணியை தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார்.
சுக்ரிதி வேணி, கடந்த ஜனவரி மாதம் காந்திய கொள்கையான அகிம்சையை மையமாக கொண்டு வெளியான ‘காந்தி தாத்தா செட்டு’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் சுக்ரிதியின் நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன.
பத்மாவதி மல்லாடி இயக்கிய இந்த படம் ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது.
இதற்கிடையில், சமீபத்தில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் , சிறந்த குழந்தை நடிகைக்கான தேசிய விருதை சுக்ரிதி வேணி வென்றார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த சூழலில், சுகுமார், அவரது மனைவி, சுக்ரிதி வேணி, தயாரிப்பாளர் எலமஞ்சிலி ரவிசங்கர் உள்ளிட்டோர் நேற்று முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சந்தித்தனர். அப்போது சுக்ரிதி வேணிக்கு பொன்னாடை போர்த்தி ரேவந்த் ரெட்டி பாராட்டினார்.






