பிரபல சின்னத்திரை நடிகை மீது மோசடி புகார்; விசாரணைக்கு ஆஜராக போலீஸ் சம்மன்

பூந்தமல்லி,
சென்னை போரூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் கண்ணன். ஓட்டல் அதிபரான இவர். பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ” ‘பாண்டியன் ஸ்டோர்’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை ரிகானா பேகம், நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானார். என்னுடன் நட்பாக பழகிய அவர், தனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும் கூறினார். எனக்கும் திருமணம் ஆகாததால் ரிகானா பேகத்தை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது தாய் கூறினார்.
அதன்பிறகு நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள நடிகை ரிகானா பேகம் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தேன். நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். இதனால் அவர் கேட்ட நகை உள்ளிட்ட பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்தேன். இவ்வாறு சுமார் ரூ.20 லட்சம் வரை அவருக்காக செலவு செய்தேன்.
கடந்த ஆண்டு அவரது உறவினர்கள் முன்னிலையில் ரிகானா பேகத்தின் கழுத்தில் நான் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டேன். ரிகானா பேகம், தான் டி.வி. தொடர் படப்பிடிப்புக்காக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டும் என கூறியதால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. அதன்பிறகுதான் அவர் முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் அவருடன் தொடர்பில் இருப்பதும், திருமண ஆசை காட்டி என்னிடம் நகை, பணத்தை வாங்கி மோசடி செய்ததும் தெரிந்தது. ரிகானா பேகத்தின் மீது நடவடிக்கை எடுத்து எனது நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும் ” என புகார் மனுவில் கூறியுள்ளார்.
அதன்பேரில் பூந்தமல்லி போலீசார் ராஜ்கண்ணன் மற்றும் டி.வி. நடிகை ரிகானா பேகம் இருவருக்கும் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் இருவரும் விசாரணைக்காக நாளை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் நடிகை ரிகானா பேகம், வெளியிட்டுள்ள ஒரு ஆடியோவில் கூறி இருப்பதாவது:- ராஜ்கண்ணன், தனது தொழிலை விரிவுபடுத்துவதாகவும், அதில் கிடைக்கும் லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறி என்னிடம் இருந்து ரூ.18½ லட்சம் வாங்கினார். ஆனால் அவர் அதன்பிறகு எந்த பணத்தையும் எனக்கு தரவில்லை. அடிக்கடி ரவுடிபோல் என்னை கத்தியை காட்டி மிரட்டி வந்தார். அவர் தங்க சங்கிலி என்று கூறி எனது கழுத்தில் அணிவித்தார். ஆனால் அது இந்துக்கள் அணியும் தாலி போல் இருந்ததால் கழற்றி வைத்துவிட்டேன். எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் ராஜ்கண்ணன்தான்.
இவ்வாறு அந்த ஆடியோவில் ரிகானா பேகம் பேசி உள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.