பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த “மகா அவதார் நரசிம்மா” படம்

சென்னை,
கேஜிஎப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த கன்னடத்தில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் குறைந்த செலவில் பிரமாண்ட படங்களை தயாரிப்பதில் தனித்துவம் பெற்றது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள ‘மகா அவதார் நரசிம்மா’ படம் இரண்ய கசிபு என்ற அரக்கன், அவனது மகன் பிரகலாதன், விஷ்ணுவை மையமாக வைத்து புராண திரைப்படமாக உருவாகியிருக்கிறது.
இந்த அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். அனிமேஷனில் வரும் காட்சிகள் உலகத் தரத்தில் இருப்பதாக சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் வகையில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன.
இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் குறித்த விவரத்தை தயாரிப்பு நிறுவனமான ஹொம்பாலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ.210 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்ப்படுகிறது. இந்த நிலையில் இப்படம் பாலிவுட் சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது, இந்தியில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது ‘மகா அவதார் நரசிம்மா’ படம்.