"பறந்து போ" படத்தை பாராட்டிய ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

சென்னை,
எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . “கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி” உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது ‘பறந்து போ’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த ‘ரோட் டிராமா’வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் ‘பறந்து போ’ ஸ்பெஷல் ஷோவை பார்த்துவிட்டு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது டுவிட்டரில் “இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ மிகச்சிறந்த திரைப்படம். பார்வையாளர்கள் மீண்டும் சினிமா மீது காதல் வயப்பட போகின்றனர்!” என்று பதிவிட்டுள்ளார்.
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.