"நல்ல படங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால்…" -இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 1-ம் தேதி வெளியான படம் ‘ரெட்ரோ’. பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதற்கிடையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். தனது படங்களுக்கு வரும் விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். அதாவது, “திரைப்படங்கள் உங்களை எப்போதும் பாதிக்காது. ஒரு சிலர் மக்களை திரைப்படங்களுக்கு போகாமல் தடுப்பதை சமூக சேவையாக கருதுகிறார்கள். மது குடிப்பதை, சிகரெட் பிடிப்பதை தடுக்கலாம், படம் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும்? ரசிகர்களிடம் விட்டுவிடுங்கள் அவர்கள் முடிவு செய்யட்டும். நல்ல படங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான்” என்று தெரிவித்துள்ளார்.