நடிகை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு பாரில் மது அருந்தியபோது இரு கும்பலுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒரு கும்பல் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளது. அவர்களை பின்தொடர்ந்த மற்றொரு கும்பல் அந்த காரை மறித்து, அதிலிருந்த ஐடி ஊழியர் ஒருவரை கடத்தி சென்று தாக்கியுள்ளனர்.
இது தொடர்பாக மிதுன், அனீஷ், சோனாமோல் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய கும்பலில் நடிகை லட்சுமி மேனன் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடிகை லட்சுமி மேனனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனிடையே அவர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். நடிகை லட்சுமி மேனனுக்கு முன் ஜாமின் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம், செப்டம்பர் 17ம் தேதி வரை அவரை கைது செய்ய தடை விதித்துள்ளது.
நடிகை லட்சுமி மேனன் தமிழில் கும்கி, சுந்தரபாண்டியன், கொம்பன், வேதாளம், பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






