நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்


பெங்களூரு,

துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வந்ததாக கன்னட நடிகை ரன்யா ராவை கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 கிலோ தங்கம் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது ரன்யா ராவ் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து ரன்யா ராவிடம் விசாரணை நடத்தினர். தங்கக் கடத்தல் வழக்கில் பண முறைகேடும் நடைபெற்றிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின்பேரில், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகை ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34.12 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள விக்டோரியா லேஅவுட்டில் உள்ள ஒரு குடியிருப்பு வீடு, அர்காவதி லேஅவுட்டில் உள்ள ஒரு குடியிருப்பு நிலம், தும்கூரில் ஒரு தொழில்துறை நிலம், ஆனேகல் தாலுகாவில் ஒரு விவசாய நிலம் ஆகியவை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சொத்துக்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.34.12 கோடி என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *