நடிகைக்கு எதிரான புகாரை அரசு பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை,
சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த சிவகாமி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “சென்னை கிழக்கு கடற்கரை சாலையை விரிவுபடுத்தும் வகையில் திருவான்மியூரில் இருந்து அக்கரை வரை சாலையோரத்தில் உள்ள நிலங்களை மாநில நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியது. அந்தவகையில் எங்களது குடும்பத்துக்கு சொந்தமான 1,420 சதுர அடி நிலத்தை கையகப்படுத்தியது. இதற்கான இழப்பீட்டுத்தொகை ரூ.1.87 கோடியை எங்களுக்கு வழங்குவதற்கு பதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோருக்கு நெடுஞ்சாலைத்துறை வழங்கியிருப்பது சட்டவிரோதமானது. அந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது.
எனவே, அந்த தொகையை திருப்பி வசூலித்து எங்களுக்கு வழங்க வேண்டும். இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை 26-ந் தேதி அளித்த என் புகார் மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுதாரரின் கோரிக்கையை 4 வாரங்களில் பரிசீலிக்க தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.