நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்


ஐதராபாத்,

புஷ்பா 2 பட நடிகர் அல்லு அர்ஜுன். இவர் கடந்த 4ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்ட புஷ்பா 2 படத்தை பார்க்க சென்றார். அவருடம் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா தியேட்டருக்கு வந்தனர்.

இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது, ரசிகர்கள் பலர் இருவர் மீதும் ஏறி மிதித்தனர். இதனால், இருவரும் மூச்சுப்பேச்சின்றி சுயநினைவு இழந்தனர். இதையடுத்து, இருவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிறுவன் ஸ்ரீதேஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ரேவதி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேவேளை, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதனிடையே, ரேவதி உயிரிழப்பு சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் இன்று கைது செய்தனர். தெரிந்தே மரணத்தை விளைவிக்கும் குற்றத்தில் ஈடுபடுதல், திட்டமிட்டு கொடும் காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார்.

சிக்கட்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அல்லு அர்ஜுன் பின்னர் நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அதேவேளை, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுன் தெலுங்கானா ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வழக்கு இதுவரை விசாரணைக்கு வரவில்லை.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நம்பள்ளி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *