தெலுங்கு படங்கள் ரூ.1000 கோடி வசூலிப்பதற்கு முக்கிய காரணம் இதுதான்- சிவகார்த்திகேயன் | This is the main reason why Telugu films collect Rs. 1000 crores

ஐதராபாத்,
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள படம் மதராசி. படத்தில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். வருகிற 5-ந்தேதி படம் திரைக்கு வருகிறது. இதையொட்டி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்த மதராசி படவிழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அப்போது தெலுங்கில் பேசி ரசிகர்களை கவர்ந்தார். அவரது தெலுங்கு பேச்சை கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
சிவகார்த்திகேயன் பேசுகையில், ‘சிரஞ்சீவி மற்றும் மகேஷ்பாபு படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். ருக்மணி வசந்த் உள்ளும், புறமும் அழகானவர். பாகுபலி, புஷ்பா, ஆர்.ஆர்.ஆர். போன்ற தெலுங்கு படங்கள் ரூ.1000 கோடி வசூல் சாதனையை அசால்டாக செய்தன. விமர்சனங்களை கடந்து தெலுங்கு படங்கள் வசூலில் சாதித்து வருகின்றன. தெலுங்கில் தயாரிப்பவர்கள் ஒரு கண்டன்ட்டை நம்பி விட்டால் படத்துக்கு செலவு செய்ய தயங்க மாட்டார்கள். நம்பிக்கையோடு எந்த அளவுக்கும் செலவு செய்து பிரமாண்டமாக படம் எடுத்து வருகின்றனர். அடுத்தடுத்து தெலுங்கு படங்கள் ரூ.1000 கோடி வசூலிப்பதற்கு முக்கிய காரணம் தயாரிப்பாளர்கள்தான். இவ்வாறு அவர் பேசினார்.