துப்பாக்கிச்சூடு நடத்தும் அளவுக்கு என் மகள் அநாகரிகமாக எதுவும் பேசவில்லை – திஷா பதானி தந்தை விளக்கம்

உத்தர பிரதேசம்,
தெலுங்கில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘லோபர்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை திஷா பதானி. தொடர்ந்து ‘எம்.எஸ்.தோனி- தி அன்டோல்டு ஸ்டோரி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இதனைதொடர்ந்து பாலிவுட் திரை உலகில் பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்து வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரெபேலி நகரில் உள்ள நடிகை திஷா பதானியில் வீட்டின் முன் நேற்று அதிகாலை இருவர் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். பலமுறை துப்பாக்கி நடத்திய நிலையில், வானத்தை நோக்கியும் சுட்டுள்ளனர். இந்து துறவிகள் பிரேமானந்த் மகாராஜ், அனிருதாசார்யா மகாராஜ் ஆகியோரை இழிவுப்படுத்தியதற்காக திஷா படானி வீடு மீது துப்பாக்கி சூடு நடத்திபப்ட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக ரோஹித் கோதாரா – கோல்டி பிரார் கும்பல் சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த பதிவில், “வீரேந்திர சரண், மகேந்திர சரண் ஆகியோர் துப்பாக்கிசூடு நடத்தினர். நாங்கள் அதை செய்தோம். எங்களுடைய மதத்திற்குரிய துறவிகளை அவர் இழிவுப்படுத்தியுள்ளார். சனாதன தர்மத்தை இழிவுப்படுத்த முயன்றார். எங்களுடைய தெய்வங்ளை இழிவுப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. இது வெறும் டிரெய்லர்தான். அடுத்த முறை, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் உயிரோடு இருக்க முடியாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து திஷா பதானியின் தந்தை ஜெகதிஷ் சிங் பதானி கூறும்போது, “எனது மூத்த மகள் குஷ்பு பதானியின் (திஷா பதானி சகோதரி) கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் சனாதனிகள். சாதுக்களை நாங்கள் மதிக்கிறோம். இந்த விவகாரத்தில் எங்களுக்கு எதிராக சதி நடந்துள்ளது. துப்பாக்கியால் சுடும் அளவுக்கு என் மகள் எதுவும் அநாகரிகமாக பேசவில்லை. அனிருதா ஆச்சார்யா பெண்கள் குறித்து ஒரு கருத்து தெரிவித்தார். என் மகள் ஒரு கருத்து தெரிவித்தார். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது’’ என்றார்.
திஷா பதானியின் சகோதரி குஷ்பு பதானி, கடந்த ஜூலை மாதம், அனிருதா ஆச்சார்யா பெண்களை வெறுக்கும் வகையில் கருத்து தெரிவித்திருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இந்தக் கருத்து ஆன்மிக தலைவர் பிரேமானந்த் ஜி மகராஜை அவமதிக்கும் வகையில் இருப்பதாக செய்தி வெளியானது. இதற்கு குஷ்பு உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தார்.