திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு: ரஜினிகாந்துக்கு பவன் கல்யாண் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியானது. இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 171 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
திரை உலகில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து, இருமுறை பத்ம விபூஷன் விருது, திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். இந்த நிலையில், சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்துக்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் “சூப்பர் ஸ்டார் ரஜினி எனத் திரையில் தோன்றும்போது அரங்கமே அதிரும் என்பதை சென்னையில் பலமுறை பார்த்திருக்கிறேன். தலைமுறைகள் மாறினாலும், இந்த மகிழ்ச்சி குறையவில்லை. இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வென்ற உச்ச நாயகன் ரஜினிகாந்த் ஒரு நடிகராக 5 தசாப்தங்கள் நிறைவு செய்துள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திரை வாழ்க்கையில் பொன்விழா கொண்டாடும் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.