திருப்பதியில் கெனிஷாவுடன் ரவி மோகன் சாமி தரிசனம்

திருப்பதி,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபகாலமாக பரபரப்பாக பேசப்படும் விஷயமாக இருப்பது நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம். இவர்களின் விவாகரத்து பிரச்சினையில் முக்கிய காரணமாக இருப்பது பாடகி கெனிஷா என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரவிமோகன் மற்றும் கெனிஷா நேற்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சென்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோவில் அதிகாரிகள் லட்டு, தீர்த்தப்பிரசாதம் வழங்கினர். கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் ரவிமோகன், கெனிஷாவை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்கள் பின்தொடர்ந்து சென்று ஆர்வத்துடன் புகைப்படம், செல்பி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ரவிமோகன் “மன அமைதி, நிம்மதிக்காகவும் எனது மகன்கள், அப்பா அனைவருக்காகவும் வேண்டிக்கொண்டேன். பொங்கலுக்கு பராசக்தி, அடுத்து சீனி உள்ளிட்ட அடுத்தடுத்து படம் வெளியாகிறது” என்றார்.






