திருச்செந்தூர் முருகன் எனக்கு தொடர்ந்து வெற்றியை தருகிறார் – யோகி பாபு | Lord Murugan of Tiruchendur continues to give me success

தூத்துக்குடி,
நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ படத்தில் யோகி பாபுவின் நடிப்பு பட்டிதொட்டி எங்கும் பரவியது. இவர் தற்போது ரஜினியின், ஜெயிலர் 2 படத்தில் முக்கிய கதாபாத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு நேற்று சாமி தரிசனம் செய்தார். அதற்கு முன்னதாக அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் பக்தர்கள் உற்சாகமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் நடிகர் யோகிபாபு செய்தியாளர்களின் சந்திப்பின் போது, ”திருச்செந்தூர் முருகப்பெருமான் எனக்கு தொடர்ந்து வெற்றியை தந்து கொண்டிருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகம் படத்திலும் நடித்து வருகிறேன். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் படம் அருமையாக வந்துள்ளது. அதில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.