தயாரிப்பாளர் சங்கம் – பெப்சி பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம்

தயாரிப்பாளர் சங்கம் – பெப்சி பிரச்சினைக்கு தீர்வு காண மத்தியஸ்தர் நியமனம்


சென்னை,

தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் பெப்சிக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய சங்கத்தை தொடங்கி இருப்பதாக பெப்சி குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்களில் பெப்சி அமைப்பின் உறுப்பினர்கள் பணியாற்றுவதை நிறுத்த வேண்டும், ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 2ம் தேதி பெப்சி கடிதம் அனுப்பி இருந்தது.

இதனால் படப்பிடிப்பு மற்றும் படத் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ள நிலையில் பெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்களின் ஒத்துழையாமை முடிவால் சினிமாத் தயாரிப்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பெப்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு சங்கங்கள் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2025 மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டதால், அவர்களுடன் பணியாற்றுமாறு தங்களை கட்டாயப்படுத்த முடியாது என தெரிவித்தார். மேலும், குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் தங்களது சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலை வாங்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்சினைகளை சந்திப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, இரு சங்கங்கள் இடையேயான பிரச்சினையை பேசி தீர்ப்பதற்கு ஏன் மத்தியஸ்தரை நியமிக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட், யாரை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என கலந்தாலோசித்து தெரிவிக்க இரு தரப்புக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த பிரச்சினையில் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை நியமிக்கலாம் என்று இரு தரப்பும் சம்மதம் தெரிவித்தது. இதை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு, மத்தியஸ்தரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, திரைப்படங்கள் தயாரிப்புக்கு இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு வழங்குமாறு பெப்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பெப்சி சங்கம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்தியஸ்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *