தமன்னா சர்ச்சையால் சோப்பு நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்

பெங்களூரு,
கர்நாடக சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனம் மைசூரு சாண்டல் என்ற பெயரில் பல்வேறு வகையான சோப்புகளை தயாரித்து விற்பனை செய்கிறது. மைசூரு சாண்டல் சோப்பு வியாபாரத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் அந்த நிறுவனம், பிரபல நடிகை தமன்னாவை விளம்பர தூதராக நியமித்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு அவருக்கு ரூ.6.20 கோடி சம்பளம் வழங்க அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இதற்கு கன்னட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த பணிக்கு கர்நாடகத்தை சேர்ந்த ஒரு நடிகையை தேர்ந்தெடுத்து இருக்க வேண்டும் என்று அந்த அமைப்புகள் கூறுகின்றன. மேலும் சமூக வலைதளங்களில் கன்னடர்கள் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக கருத்துகளை கூறி வந்தனர்.
இது குறித்து கர்நாடக தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் ” மைசூரு சாண்டல் நிறுவனத்தின் வணிகத்தை அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் கோடியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். நடிகை தமன்னாவை நியமிப்பதற்கு முன்பு நாங்கள் கன்னடரான நடிகை தீபிகா படுகோனே, ராஷ்மிகா மந்தனா ஆகியோரை சந்தித்து இதுபற்றி பேசினோம். அவர்களுடன் நடிகைகள் ஸ்ரீலீலா, பூஜா ஹெக்டே, கியாரா அத்வானி ஆகியோரிடமும் பேசினோம். தீபிகா படுகோனே வேறு பிரசார நிகழ்வுகளில் தீவிரமாக உள்ளார். மற்ற நடிகைகள் பிற நிறுவனங்களின் தயாரிப்புகளில் விளம்பர தூதர்களாக பணியாற்றி வருகிறார்கள். அதனால் சமூக வலைதளங்களில் 2.8 கோடி பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள நடிகை தமன்னாவை நாங்கள் விளம்பர தூதராக நியமித்துள்ளோம்” என்றார்.
இந்நிலையில், கர்நாடகாவின் புகழ்பெற்ற மைசூர் சாண்டல் சோப்பு பிராண்ட், மே மாதத்தில் வரலாறு காணாத விற்பனையை எட்டியுள்ளது. நடிகை தமன்னாவை விளம்பர தூதராக நியமித்தது தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியிலும், இந்த பிராண்ட் ரூ.186 கோடி விற்பனை செய்து, ஒரே மாதத்தில் மிக உயர்ந்த விற்பனை சாதனையைப் பதிவு செய்துள்ளது.