"தக் லைப்" படத்தால் விஜய்யின் "ஜனநாயகன்" படம் வெளியாவதில் சிக்கல்

சென்னை,
கன்னடம் , தமிழிலிருந்து உருவானது என்று கமல்ஹாசன் கூறியதற்கு எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ‘தக் லைப்’ படத்தை வெளியிட தடை விதித்தது. இதனைத்தொடர்ந்து, கர்நாடகாவில் ‘தக் லைப்’ படத்தை வெளியிட கோரி கமல்ஹாசன், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி மூலம் தாக்கல் செய்த இந்த மனுவில், கர்நாடக மாநில அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் படத்தின் வெளியீட்டைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய கோரியும் கமல்ஹாசன் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்புக்கு நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. இதற்கிடையில், கர்நாடக பிலிம் சேம்பர் தலைவர் நரசிம்மலுக்கு கமல்ஹாசன் விளக்க கடிதம் எழுதியிருந்தநிலையில், அந்த விளக்க கடிதம் குறித்து கர்நாடக ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, கர்நாடகாவில் ‘தக் லைப்’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கமல்ஹாசன் தரப்பு வாதிட்டதையடுத்து, பட வெளியீடு ஒத்திவைக்கப்படுவதால் வழக்கு விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம் என கர்நாடக ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ‘தக் லைப்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடாவிட்டால் தமிழ்நாட்டில் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தை திரையிட விடமாட்டோம் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பெங்களூருவைச் சேர்ந்த கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் மற்றொரு படமான ‘டாக்ஸிக்’ திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் யாஷ் நடித்து வருகிறார்.
‘தக் லைப்’ படத்திற்கு இடையூறு கொடுத்தாலோ அல்லது கர்நாடகாவில் இந்த படத்தை வெளியிடாமல் செய்தாலோ தமிழகத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தையும், ‘டாக்ஸிக்’ திரைப்படத்தையும் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என கமலுக்கு ஆதரவாக பலரும் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.