டோலிவுட்டில் நாளை முதல் படப்பிடிப்புகள் நிறுத்தம்

சினிமா தொழிலாளர்களுக்கு மூன்று வருடத்துக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். கடந்த 4 வருடங்களாக தெலுங்கு சினிமா தொழிலாளர்களுக்கு ஊதியம் மாற்றி அமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஊதிய உயர்வு கோரி, 24 அமைப்புகளைக் கொண்ட தெலுங்கு திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.
தங்கள் கோரிக்கைக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் பதிலளிக்காததால், போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் ஊதிய உயர்வு, முடிவுக்கு வரும்வரை படப்பிடிப்புகளில் பங்கேற்க மாட்டோம் என்றும் திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
30 சதவீத உயர்வு சம்பளத்தை நாளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பள உயர்வு வழங்கப்பட்டவர்கள் நாளை முதல் படப்பிடிப்பில் பங்கேற்பார்கள் என்று கூட்டமைப்புத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.