செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு 3 நாட்கள் யாருடனும் பேசாமல் இருந்த சமந்தா; ஏன் தெரியுமா?

சென்னை,
முன்னணி நடிகையான சமந்தா, செல்போன்கள் குறித்து பகிர்ந்து கொண்ட ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமந்தா கூறும்போது, “என் கையில் எப்போதும் வைத்திருக்கும் செல்போன் குறித்து எனக்கு ‘திடீர்’ சிந்தனை எழுந்தது. இதையடுத்து 3 நாட்கள் என் செல்போனை ‘சுவிட்ச்-ஆப்’ செய்தேன். யாருடனும் பேசவில்லை. யாரையும் தொடர்புகொள்ளவும் இல்லை. யாரையும் பார்க்கவும் இல்லை. புத்தகம் படிப்பது, எழுதுவது என எந்த வேலையும் செய்யவில்லை. 3 நாட்கள் என் மூளைக்கு முழு ஓய்வு தந்தேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது.
என்னுடைய ஈகோவின் பெரும்பகுதி என் செல்போனுடன் தான் இணைக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்தேன். நான் யார், நான் எவ்வளவு முக்கியமானவன், நான் என்ன சாதித்தேன்? என்பதை செல்போன் தான் சொல்கிறது. அது இல்லாதபோது, நான் ஒரு சாதாரண உயிரினம் என்ற எண்ணமே வந்தது.
பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் செல்போன்கள் நம்மை செயற்கையான விஷயங்களில் மூழ்கடித்து விடுகின்றன. நமது முன்னேற்றத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் செல்போன் எவ்வளவு தடையாக இருக்கிறது என்பதை முழுமையாக புரிந்துகொண்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தை பிரபலங்கள் பலரும் ஆதரித்துள்ளனர்.