சினிமா, நாசர், விஷால், நடிகர் சங்க கட்டடம், நடிகர் சங்கம்,Cinema, Nasser, Vishal, Nadigar Sangam building, Nadigar Sangam

சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம், சென்னையில் இன்று காலை நடந்தது. இதில் 950க்கும் அதிகமான நடிகர் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் நிகழ்வை முன்னின்று நடத்தினர். முதலில் இந்த ஆண்டு மறைந்த சரோஜாதேவி, ரோபோ சங்கர், மனோஜ், டில்லி கணேஷ் உள்ளிட்ட 70 சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நடிகர் சங்க பொதுக்குழுவில் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தேசியவிருது பெற உள்ள நடிகை ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
சமூகவலைதளங்களில் நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதுாறாக பேசிய சிலர் மீது போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது இன்னும் தீவிரமாகும். நடிகர் சங்க புதுக்கட்டட திறப்புவிழா தேதி விரைவில் அறிவிக்கப்படும். தாதாசாகேப் விருது பெற்ற மோகன்லால், பத்ம பூஷண் விருது பெற்ற அஜித் மற்றும் தேசியவிருது பெறுபவர்களுக்கு வாழ்த்துகள் என்றார்.
நடிகர் சங்க செயலாளர் விஷால் பேசுகையில்,
பேச்சிலராக இது என்னுடைய கடைசி பொதுக்குழு, நடிகர் சங்க கட்டட விழா முடிந்தவுடன் என் திருமணம் நடக்கும், இப்போது ஆக்ரோஷமாக பேசுவதில்லை. அனைவரையும் அரவணைத்து செல்கிறேன். எங்கள் உழைப்பின் பலனாக புது கட்டடம் இருக்கும். நடிகர் சங்க கட்ட பலரும் உதவி செய்து வருகிறார்கள். எந்த நடிகர், நடிகையிடம் இவ்வளவு பணம் கொடுங்க என்று கேட்க முடியாது. நாங்கள் ஆசிரியர்கள் அல்ல. அவர்களாக கொடுப்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும், பல முன்னணி நடிகர்கள் பணம் வாங்காமல் கலைநிகழ்ச்சிகளுக்கு வருகிறார்கள். அதுவே பெரிய உதவி’ என்றார்.
நடிகர் சங்க பொதுக்குழுவின் முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ்,சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டவர்களும், முன்னணி நடிகைகளும் வழக்கம்போல் கலந்துகொள்ளவில்லை.