சினிமா சிலருக்கு மட்டும் சாதகமாக இருக்கிறது – நடிகர் உதயா, Cinema is only beneficial for some

பிரபு சீனிவாஸ் இயக்கத்தில் உதயா தயாரித்து, நடித்த ‘அக்யூஸ்ட்’ படம், கடந்த 1-ந்தேதி ரிலீசானது. ஜான்விகா, சயந்திகா, அஜ்மல், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினர்.
இந்த விழாவில் உதயா கலந்து கொண்டு பேசும்போது, ‘‘25 ஆண்டுகள் கழித்து வெற்றி கிடைத்திருக்கிறது. ஆனால் இதை பார்ப்பதற்கு என் தாயார் உயிருடன் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. சூழ்ச்சிகள் மூலம் நல்ல படங்களை தடுக்க சினிமாவில் முயற்சிக்கிறார்கள். ‘அக்யூஸ்ட்’ படம் ஓடவில்லை என்றால் சினிமாவில் இருந்து காணாமல் போயிருப்பேன்.
தயாரிப்பாளர் சங்கம் வலிமையாக இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் எல்லா படங்களும் போட்டியிடுவதால் நல்ல படங்கள் கூட ஓட முடியாத நிலை இருக்கிறது. எனவே படம் ரிலீஸ் செய்வதில் புதிய வரைமுறையைக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் அனைத்து படங்களும் காப்பாற்றப்படும். சினிமா சிலருக்கு மட்டும் சாதகமாக இருக்கிறது. சிலர் மட்டுமே உரிமை கொண்டாடக் கூடிய சூழல் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்’’ என்றார்.






