சினிமாவும் ஒரு காரணம் – இயக்குநர் பேரரசு|Cinema is also a reason

சென்னை,
திருத்தணி பகுதியில் 4 இளஞ்சிறார்களால் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நபர் தாக்கப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, த.வெ.க. தலைவர் விஜய், நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் தங்களின் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடந்த மனிதமற்ற கொடூர செயலைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்மைக்காலமாகத் தமிழகத்தில் அதிகரித்துவரக்கூடிய போதைப் பொருள் கலாச்சாரத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சியாளர்களுடைய மெத்தனப் போக்கே இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணம். இத்தகைய குற்றச் செயல்கள் பள்ளி, கல்லூரிகளிலும் தலைவிரித்து ஆடுவதை அலட்சியமாகப் பார்த்ததன் விளைவுதான் இன்றைக்குப் பொதுவெளியில் எந்தவோர் அச்சமுமின்றி வெளிப்படும் கும்பல் மனநிலைக்குக் காரணம் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம் என இயக்குநர் பேரரசு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
திருத்தணி சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம். தற்பொழுது சில திரைப்படங்களில் வன்முறை… வன்முறை… வன்முறை… சமூகத்தின் மீது அரசாங்கத்திற்கு எந்த அளவிற்கு அக்கறை இருக்கிறதோ அதே அளவு திரைப்பட இயக்குநர்களுக்கும், அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களுக்கும் வேண்டும் என கூறியுள்ளார்.






