சமந்தா போல ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்- ‘பிளாக்மெயில்’ பட நடிகை | I want to play action roles like Samantha

சென்னை,
‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர், தேஜு அஸ்வினி. நடனத்திலும் அசத்தி வரும் இவர், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்த ‘பிளாக்மெயில்’ படம் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் பிரபலமான தேஜு அஸ்வினி, தனது சினிமா பயணம் குறித்து மனம் திறக்கிறார்.
‘‘நான் சினிமாவில் நுழைந்ததே எதிர்பாராதவிதமாகத்தான். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன். என் நண்பர்கள் எடுத்த குறும்படம் ஒன்றில் நடித்தேன். எனது நடிப்பை பாராட்டி நிறைய குறும்படங்களில் வாய்ப்பு வந்தன. அப்படியே மாடலிங் துறைக்கு வந்தேன். நாட்கள் செல்லச்செல்ல சினிமா மீது காதல் முற்றிவிட்டது. எனவே வேலைக்கு முழுக்கு போட்டுவிட்டு, சினிமாவுக்கு தாவிவிட்டேன்.
என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்றால் அது `பிளாக்மெயில்’ படம் தான். `பிளாக்மெயில்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் தான் என்னை நடிக்க பரிந்துரை செய்ததாக நண்பர்கள் மூலமாக அறிந்தேன். மிகவும் சந்தோஷம் கொண்டேன். இது ஒரு அட்டகாசமான, எல்லா எமோஷனல்களும் கலந்த படம்.
நான் ரொம்ப ஜாலியான ஆள். துருதுருவென இருப்பேன். சும்மா இருக்கவே எனக்கு பிடிக்காது. எதையாவது செய்துகொண்டே இருப்பேன். எதையாவது சாதிக்க துடிக்கும் ஆள் நான். நேரத்தை வீணடிக்க எனக்கு பிடிக்கவே பிடிக்காது. படிக்கும் காலத்தில் விளையாட்டிலும் சிறந்து விளங்கினேன். என் பெற்றோர் ரொம்ப கண்டிப்பானவர்கள் என்பதால் படிப்பு மட்டுமே வாழ்க்கையாக இருந்தது. அதனால் காதலுக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
கவுதம் மேனன் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதேபோல ‘பேமிலிமேன்’ படத்தில் வரும் சமந்தா போல ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். பாக்சிங், சிலம்பம் போன்ற பயிற்சிகளை கற்றுக்கொண்டு வருகிறேன். என்னை பொறுத்தவரை கதைக்கு அவசியம் என்றால் கவர்ச்சியாக, அதுவும் ரசிக்கும்படியாக மட்டுமே நடிக்கலாம். அதில் நான் உறுதியாக இருக்கிறேன் ’’ என்று கூறியுள்ளார்.






