‘கூலி படத்தில் நடித்ததே தவறு’ என அமீர்கான் சொன்னாரா?.. உண்மை என்ன?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான திரைப்படம் கூலி. அனிருத் இசையமைத்திந்த இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்திருந்தார். மேலும் சிறப்பு தோற்றத்தில் அமீர்கான் நடித்திருந்தார். இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய தவறு என அமீர்கான் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி சாருக்காக கூலி படத்தில் கேமியோ கதாப்பாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என் கதாபாத்திரம் என்னவென்று எனக்கே புரியவில்லை. நான் உள்ளே வந்தேன், ஒன்று அல்லது இரண்டு வசனங்களைப் பேசினேன், பின்னர் மறைந்துவிட்டேன். அதற்கு எந்த நோக்கமும் இல்லை. எனது கதாபாத்திரம் மோசமாக எழுதப்பட்டிருந்தது.
இது ஒரு வேடிக்கையான தோற்றமாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் அது சரியாக அமையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இவ்வளவு பெரிய எதிர்வினை கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கூலி படத்தில் நான் நடித்தது ஒரு பெரிய தவறு. எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன். என்று சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அமீர்கான் தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே இந்த தகவல் வழக்கம் போல பரவும் வதந்தியே என்று கூறப்படுகிறது.