குக்கே சுப்பிரமணியா கோவிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்

மங்களூரு,
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் கடபாவில் பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியா கோவில் அமைந்துள்ளது. தென்இந்தியாவில் உள்ள முக்கியமான நாக ஷேத்ரங்களில் குக்கே சுப்பிரமணியாவும் ஒன்றாகும். இங்கு சுப்பிரமணியர் பாம்பின் வடிவத்தில் அருள்பாலிக்கிறார்.
இந்த நிலையில் குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு பிரபல நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்றுள்ளார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் கோவிலில் நடந்த சர்ப சமஸ்கார பூஜையில் கலந்துகொண்டனர். திருமண தடை, தோல் நோய்கள், தொழில் தடைகள் நீங்க இந்த சர்ப சமஸ்கார பூஜை நடத்தப்படுகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் சர்ப சமஸ்கார பூஜையில் பங்கேற்ற வீடியோ மற்றும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






