காலேஜ் படிக்கும்போது சீனியர்கள் மீது ஒரு கிரஷ் இருந்தது: நடிகை தேஜூ அஸ்வினி

‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர், தேஜூ அஸ்வினி. ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘பிளாக்மெயில்’இவர் நடித்துள்ளார். நடிகை தேஜூ அஸ்வினி அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஓபனாக பேசியுள்ளார். தேஜூ அஸ்வினி பேட்டியில் கூறியதாவது:-
சினிமாவுக்கு நான் வந்தது எதிர்பாராதது. நண்பர்கள் மூலமாக யூ-டியூப்பில் ஒரு குறும்படம் நடித்தேன். அதில் கிடைத்த வரவேற்பு, என்னை சினிமாவுக்கு அழைத்துவந்துவிட்டது. நான் ரொம்ப ஜாலியான ஆள். துறுதுறுவென இருப்பேன். சும்மா இருக்கவே எனக்கு பிடிக்காது. என் அருகில் உள்ளவர்களை ஓய்வு எடுக்கவே விடமாட்டேன். நான் ஓயாத அலை போன்றவள். என்னை தடுக்க யாராலும் முடியாது.
படிக்கும் காலத்திலேயே என் அக்கா காதல் வசப்பட்டுவிட்டாள். இதனால் `ஒருத்தியை தான் விட்டுவிட்டோம். உன்னையும் விட்டுவிட மாட்டோம்’ என பெற்றோர் மிகவும் கண்டிப்புடன் வளர்த்தனர். பள்ளி – வீடு, கல்லூரி – வீடு. இதுமட்டும் தான் வாழ்க்கையாக இருந்தது. அதனால் காதலுக்கு வாய்ப்பில்லாமல் போய் விட்டது பாஸ்… கல்லூரியில் படிக்கும்போது சீனியர்கள் மீது ஒரு கிரஷ் (ஈர்ப்பு) இருந்தது. மற்றபடி எதுவும் நடக்கவில்லை.
`பேமிலிமேன்’ படத்தில் வரும் சமந்தா போல ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். என்னை பொறுத்தவரை கதைக்கு அவசியம் என்றால், அது முக்கியத்துவம் வாய்ந்த காட்சி என்றால் முத்தக்காட்சி, நெருக்கமான காட்சிகளில் நடிப்பேன்” என்றார்.