கவுதம் ராம் கார்த்திக்கின் புதிய பட பூஜை

சென்னை,
1980களில் தமிழ் சினிமாவில் காதல் மன்னனாக கொடிகட்டிப் பறந்தவர் நவரச நாயகன் கார்த்திக். மெளன ராகம், மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா என பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து டாப் ஹீரோவாக வலம் வந்த கார்த்திக்கிற்கு கவுதம் கார்த்திக் என்கிற மகன் உள்ளார். தன்னைப்போலவே தன் மகனும் சினிமாவில் ஹீரோவாக ஜொலிக்க வேண்டும் என்கிற ஆசையில் கடந்த 2013-ம் ஆண்டு கவுதம் கார்த்திக்கை தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார்.
கவுதம் கார்த்திக், மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘கடல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ரங்கூன்’, ‘முத்துராமலிங்கம்’, ‘தேவராட்டம்’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தேவராட்டம் படத்தில் நடித்தபோது நடிகை மஞ்சிமா மோகனை காதலித்த கவுதம் கார்த்திக் அவரை கடந்த 2022-ம் ஆண்டு நடிகை மஞ்சிமா மோகனை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
சினிமாவில் திருப்புமுனை ஏற்படுவதற்காக நடிகர்கள் பெயரை மாற்றுவதுண்டு. நடிகர் ஜெயம் ரவி கூட தன் பெயரை ‘ரவி மோகன்’ என மாற்றிக்கொண்டார். அந்த வகையில் நடிகர் கவுதம் கார்த்திக் தன் பெயரை ‘கவுதம் ராம் கார்த்திக்’ என மாற்றியுள்ளார்.
மிஸ்டர் எக்ஸ், கிரிமினல் போன்ற படங்களில் நடித்து வரும் கவுதம் ராம் கார்த்திக், அடுத்தபடியாக ராஜூ முருகனின் உதவி இயக்குனர் தினா ராகவன் என்பவர் இயக்கத்தில் அவரது 19வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ராஜூ முருகன் வசனம் எழுதுகிறார்.
இப்படம் தென் சென்னை கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த அரசியல் கதையில் உருவாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜை நிகழ்ச்சியுடன் துவங்கியதாக கவுதம் கார்த்திக் அவரது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.