“கரூர்த் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் மெல்லமெல்ல விடுபட வேண்டும்” – வைரமுத்து| “Tamils should gradually free themselves from the grip of Karur tragedy”

சென்னை,
கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கரூர்த் துயரத்தின் இறுக்கத்திலிருந்து தமிழர்கள் மெல்லமெல்ல விடுபட வேண்டும். ஊடகங்களும் சமூக உரையாடல்களும் அந்த மனத்தடையிலிருந்து வெளியேற வேண்டும். அரசியல் கூட்டங்களிலோ ஆன்மிகக் கூட்டங்களிலோ இனி இந்த நெடுந்துயரம் நிகழாது என்னும் விதிசெய்ய வேண்டும். 41 சாவுகள் கன்னத்தில் அறைந்துசொன்ன பாடம் இதுதான். இந்தக் கருப்புத் துயரத்துக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய யாரும் ஒரு தனி அறையில் தம் மனச்சான்றோடு உரையாடித் தாமே தம்மிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.
ஒரு செய்தி என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. 8 மணி நேரத்திற்கு மேல் ஒரு வேலையும் இன்றி 27ஆயிரம்பேர் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்க முடியுமென்றால் அவர்களின் வாழ்வியல் என்ன? அவர்களால் இழக்கப்படும் மனிதவளம் என்ன?. கல்வி நிறைந்த சமூகம் என்கிறோமே இவர்களுக்குக் கல்வி என்ன செய்தது?.
வெறும் எழுத்தறிவா கல்வி? காலத்தின் அருமையை வாழ்வின் பெருமையைக் கற்றுத் தருவதல்லவா கல்வி. அந்த 27 ஆயிரம் பேர் இன்னும் கலைந்துவிடவில்லை. நாடெங்கும் அந்த மக்களைக் கணக்கெடுக்க வேண்டும். தொழில் கொடுத்து அவர்களுக்கு நேரமில்லாமல் செய்ய வேண்டும். நாளாகலாம்… ஆனால், அதை நோக்கிச் சமூகம் நடந்தே தீர வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.