ஒரே நாளில் இரண்டு கிளைமாக்சுடன் வெளியாகும் 'ஹவுஸ்புல் 5' படம்

மும்பை,
அக்சய் குமார் , ஜியா கான், அர்ஜுன் ராம்பால், ஜாக்குலின் பெர்னாண்டஸ், லாரா தத்தா மற்றும் சங்கி பாண்டே ஆகியோர் நடிப்பில் கடந்த 2010-ல் ‘ஹவுஸ்புல்’ படத்தின் முதல்பாகம் வெளியானது.
இந்த படம் இதுவரை 4 பாகங்கள் வெளியாகி உள்ளன. இந்த 4 பாகங்களிலும் அக்சய் குமார் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ளனர். ஒவ்வொன்றும் முந்தைய பாகத்தின் கதையுடன் தொடர்பில்லாத ஒரு புதிய கதையாகவே இருக்கும்.
தற்போது ‘ஹவுஸ்புல்’ படத்தின் 5-ம் பாகம் உருவாகி உள்ளது. 5-வது பாகத்தை எட்டிய முதல் இந்திபடம் என்ற பெருமை ‘ஹவுஸ்புல்’ படத்தையே சேரும். இதில், அக்சய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனம் பாஜ்வா, நர்கிஸ் பக்ரி, பர்தீன் கான், சவுந்தர்யா சர்மா, ஜாக்கி ஷெராப், சஞ்சய் தத், நானா படேகர் உள்ளிட்ட 24 நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற 6-ந் தேதி வெளியாக உள்ளது. இந்தபடத்தின் முழு படப்பிடிப்பும் ஒரே ஒரு கப்பலில் நடந்ததுள்ளது. நகைச்சுவை திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் ஹவுஸ்புல் 5A மற்றும் ஹவுஸ்புல் 5B என இரண்டு வெர்ஷனாக வெளியாக உள்ளது. இந்த இரண்டு வெர்ஷனுமே ஒரே நாளில் தான் ரிலீஸ் ஆக உள்ளது. ஒரே நாளில் இரண்டு கிளைமாக்ஸ் உடன் ரிலீஸ் ஆகும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.