‘எனை சுடும் பனி’ திரை விமர்சனம்

‘எனை சுடும் பனி’ திரை விமர்சனம்



சென்னை,

எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் படம், ‘எனை சுடும் பனி’. இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடித்துள்ளார். மேலும் கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ராம் சேவா.

இந்த நிலையில், ராம் சேவா இயக்கிய ‘எனை சுடும் பனி’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

பொள்ளாச்சியில் அடுத்தடுத்து இளம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுகின்றனர். கொலையாளியை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. அதே பகுதியை சேர்ந்த நட்ராஜ் சுந்தர்ராஜும் உபாசனாவும் காதலிக்கின்றனர். இந்த நிலையில் உபாசனாவும் மர்மநபரால் கடத்தப்பட்டு காயமுறுகிறார். அவரை மருத்துமனையில் சேர்க்கும் நட்ராஜ் சுந்தர்ராஜ் கடத்தியவனை தேடி அலைகிறார். இன்னொரு புறம் இளம்பெண்களை கொலை செய்பவனை சிறப்பு போலீஸ் அதிகாரி பாக்யராஜ் தலைமையில் தனிப்படை போலீசாரும் தேடுகிறார்கள். பெண்களை கடத்துபவன் யார்? போலீசில் அவன் சிக்கினானா? என்பது மீதி கதை.

நட்ராஜ் சுந்தர்ராஜ் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்து இருக்கிறார். காதலியை காப்பாற்ற போராடுவது. சைக்கோவிடம் மோதுவது என்று நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். காதலியாக வரும் உபாசனா வசீகரிக்கிறார். நடிப்பிலும் தேர்ச்சி. போலீஸ் அதிகாரியாக வரும் பாக்யராஜ் துப்பு துலக்கும் காட்சிகளில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு வலு சேர்த்துள்ளார்.

தலைவாசல் விஜய், சிங்கம்புலி, முத்துக்காளை, சித்ரா லட்சுமணன், தானிஷ், சுந்தர்ராஜ், பெல்லி முரளி, கூல் சுரேஷ், பழனி சிவபெருமாள் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளனர். திரைக்கதையை இன்னும் நேர்த்தியாக உருவாக்கி இருக்கலாம்.

வெங்கடேஷ் கேமரா இரவு நேரக்காட்சிகளை திகிலாக படம் பிடித்துள்ளது. அருள்தேவ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். இளம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றிய உண்மை சம்பவத்தை வைத்து சமூக அக்கறையோடு விறுவிறுப்பான விழிப்புணர்வு படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ராம்சேவா.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *