இயக்குநர் மாரி செல்வராஜின் வளர்ச்சியை பாராட்டிய பா.ரஞ்சித்

சென்னை,
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷ் நடித்த ‘கர்ணன்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மாமன்னன்’, மற்றும் ‘வாழை’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற 17-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இப்படத்திலிருந்து ‘தீக்கொளுத்தி’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், “ராம் சார் தான் மாரி செல்வராஜை என்னிடம் அனுப்பிவைத்தார். மெட்ராஸ் படம் மீது மாரி செல்வராஜூக்கு விமர்சனம் உள்ளது என்று கூறி தான் ராம் என்னிடம் அனுப்பினார். அப்படி தான் மாரி செல்வராஜுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. பரியேறும் பெருமாள் படத்தை விட ஒரு இயக்குநராக பைசன் படத்தில் மாரி செல்வராஜ் வளர்ச்சி அடைந்துள்ளார்” என்று தெரிவித்தார்.