இனிமேல் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன்- நடிகர் விஷால் | I will not act in kissing scenes anymore

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 35-வது படம் ஆகும். நடிகர் விஷாலுக்கு எப்போது திருமணம்? என்று திரை உலகமே ஆவலுடன் காத்திருந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்பட்ட பின்னர் தான் தனது திருமணம் என்பதில் விஷால் உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் நடந்த ஒரு பட விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், வரும் ஆகஸ்டு 29-ந்தேதி நல்ல தகவலை சொல்லுவேன் என்று விஷால் கூறியிருந்தார். அந்தவகையில் நேற்று சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷால் – சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. அவர்களி நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது நிச்சயதார்த்தம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால்,”தொலைப்பேசி வாயிலாகவும், இணையத்திலும் வாயிலாகவும் எனக்கு வாழ்த்து கூறி அனைவருக்கும் நன்றி. இன்னும் இரண்டு மாதங்களில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா கோலாகலமாக நடக்கவிருக்கிறது. நடிகர் சங்க கட்டிடம் திறந்ததும் எங்களின் திருமணம் நடக்கும்.
பேச்சுலர் வாழ்க்கை நிறைவடைந்ததை தொடர்ந்து, என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வரஉள்ளது. குறிப்பாக சினிமாவில் காதல் படங்களில் நடிப்பேன். ஆனால் முத்தக்காட்சிகளில் இனிமேல் நடிக்க மாட்டேன்.” என்று கூறியுள்ளார். இது, திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஒரு புதிய விவாதத்தை தொடங்கியுள்ளது.