இந்தியாவின் முதல் மனநல தூதராக நடிகை தீபிகா படுகோன் நியமனம்

புதுடெல்லி,
பாலிவுட் நடிகையும், ‘தி லிவ் லவ் லாப்’(LLL) அறக்கட்டளையின் நிறுவனருமான தீபிகா படுகோன், இந்தியாவின் முதல் மனநல தூதராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மனநலம் சார்ந்த உரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதில் தீபிகா படுகோன் ஆற்றிய தீவிர பங்களிப்பின் காரணமாகவே அவர் இந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக மனநல தினத்தையொட்டி, நாட்டின் மனநல ஆதரவு அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நடிகை தீபிகா படுகோனை இந்தியாவின் முதல் மனநல தூதராக மத்திய சுகாதார அமைச்சகம் நியமித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கூறுகையில், “மனநல தூதராக தீபிகா நியமனம் செய்யப்பட்டிருப்பது, நமது நாட்டில் மனநலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும். மேலும் இந்தியாவில் மனநல பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை பரப்பவும், பொது சுகாதாரத்தில் மன ஆரோக்கியத்தின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும் உதவி செய்யும்” என்று தெரிவித்தார்.
தனது புதிய பொறுப்பு குறித்து தீபிகா படுகோன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “உலக மனநல தினத்தன்று, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதல் மனநல தூதராக நியமிக்கப்பட்டதில் மிகவும் பெருமையடைகிறேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பொது சுகாதாரத்தின் முக்கிய பகுதியாக மன ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்துவதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக ‘தி லிவ் லவ் லாப்’ அறக்கட்டளையில் நாங்கள் மேற்கொண்ட பயணம் மற்றும் பணிகளின் மூலம், நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மனநலம் நிறைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்பதை தெரிந்து கண்டேன். இந்தியாவின் மனநல கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த மத்திய மந்திரி ஜே.பி.நட்டா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.