‘ஆபிஸர் ஆன் டூட்டி’ படத்தின் வெற்றியை தன் மனைவிக்கு சமர்பித்த நடிகர்

சென்னை,
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் குஞ்சாக்கோ போபன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு ‘போகையின்வில்லா’ என்ற படம் வெளியானது. அதில் பகத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து, ‘ஆபிஸர் ஆன் டூட்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த 20-ந் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிரியாமணி கதாநாயகியாக நடித்துள்ளார். ஷாகி கபீர் எழுத்தில் ஜித்து அஷ்ரப் இயக்கிய படத்தின் வரவேற்பால் திரைகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் குஞ்சாக்கோ போபன் படத்தின் வெற்றியை தன் மனைவிக்கு சமர்பித்துள்ளார். இது குறித்த பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “அழகான மனைவியுடன் ஆபிஸர்ஸ் ஆன் டூட்டி. நீ தொடர்ச்சியாக எனக்கு ஆதரவு அளித்துள்ளாய் ஒரு தோழியாக, விமர்சகராக, மிகப்பெரிய ரசிகையாக, எனது பதற்றத்தை குறைப்பவளாக இருந்துள்ளாய். இந்தப் படத்தின் வெற்றி என்னைவிடவும் உனக்கும்தான் பொருத்தமானது. இந்தப் படத்தை எனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படமாக்கிய அனைவருக்கும் எனது நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார்.