ஆபாச குறுந்தகவல் அனுப்பிய 11 பேரின் பெயர்களை வெளியிட்ட நடிகை ரம்யா

பெங்களூரு,
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான தர்ஷன், தனது ரசிகரான ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் உள்ளார். அதாவது தர்ஷனின் தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகாசாமி ஆபாச குறுந்தகவல் அனுப்பியதால் இந்த கொலை நடந்தது குறிப்பிடத்தக்கது. தர்ஷனின் ஜாமீன் மனுவுக்கு எதிராக கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து நடிகை குத்து ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு இருந்தார். அதாவது, சாதாரண குடிமகனுக்கு சுப்ரீம் கோர்ட்டு தான் நம்பிக்கை அளிக்கும். சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என நான் நம்புகிறேன் என குறிப்பிட்டு இருந்தார். இதற்கு நடிகர் தர்ஷனின் ரசிகர்கள், நடிகை ரம்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சில ரசிகர்கள் நடிகை ரம்யாவுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி வசைபாடினர்.
இந்த நிலையில் நடிகர் தர்ஷன் டெவில் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்று பெங்களூருவுக்கு கடந்த 25-ந்தேதி இரவு திரும்பினார். இதை வரவேற்று அவரது ரசிகர்கள் கருத்து பதிவிட்டு இருந்தனர். இதற்கு நடிகை ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனது இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு வரும் திபாஸ் (தர்ஷனை ரசிகர்கள் அழைக்கும் செல்லப்பெயர்) ரசிகர்களை வரவேற்கிறேன். ரேணுகாசாமியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது பற்றி உங்கள் கருத்துகளை கூறுங்கள் என பதிவிட்டார்.
இதையடுத்து அவரை படுமோசமான வார்த்தைகளில் திட்டிய தர்ஷனின் ரசிகர்கள் சிலர், ஆபாசமான தகவலையும் நடிகை ரம்யாவுக்கு எதிராக பதிவிட்டுள்ளனர். அவர்களின் செயல் அத்துமீறியதால் கோபமடைந்த நடிகை ரம்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், தனக்கு தி.பாஸ் ரசிகர்கள் ஆபாச தகவல் அனுப்பி மோசமான வார்த்தையில் கருத்தை பதிவிடுகிறார்கள். ரேணுகாசாமி அனுப்பிய செய்திக்கும், தி பாஸ் ரசிகர்கள் எனக்கு அனுப்பிய செய்திக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்கள் அனைவரும் பெண்களை வெறுப்பவர்கள். இதுபோன்றவர்கள் தான் பெண்களை பலாத்காரம் செய்கிறார்கள் என கூறியுள்ளார்.
மேலும் தனக்கு ஆபாச தகவல் அனுப்பிய 11 பேரின் பெயர்களையும் நடிகை ரம்யா வெளியிட்டுள்ளார். இதனால் நடிகர் தர்ஷன் ரசிகர்கள், நடிகை ரம்யா இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.