ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு : ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

புதுடெல்லி,
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. கடந்த 2013-ம் ஆண்டு அனில் சர்மா இயக்கத்தில் வெளியான ‘சிங் சாப் தி கிரேட்’ என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், தமிழில் ‘லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘டாகு மகாராஜ்’ படத்தில் நடித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் 16ம் தேதி ஆஜராகுமாறு நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணையில் ஊர்வசி ரவுத்தேலாவிடம் வாக்குமூலம் பெற அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அமலாக்கத்துறை சமீபத்தில் விசாரணை நடத்தியது.