அனைத்து கடவுள் நம்பிக்கைகளுக்கும் நான் எதிரானவன் – நடிகர் சத்யராஜ்

சென்னை,
தமிழ் சினிமாவில் இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டு விளங்கியவரும், பெரியாரிய சிந்தனை கொண்டவருமான வேலு பிரபாகரன் (68) உடல்நலக்குறைவால் கடந்த ஜூலை 18ம் தேதி காலமானார். வேலு பிரபாகரனின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில், நடிகர் சத்யராஜ், பாடகர் அந்தோணி தாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், “வேலு பிரபாகரன் கொடுத்த பெரியார் புத்தகம் தன்னை சிந்திக்க தூண்டி பகுத்தறிவாளனாக மாற்றியது. வேலு பிரபாகரன் எம்ஜிஆர் ரசிகர். எம்ஜிஆரை போன்று பல முறை என்னிடம் நடித்து காட்டியுள்ளார். 1988ம் ஆண்டு வெளி வந்த ‘பிக்பாக்கெட்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நான் பணியாற்றியுள்ளேன். இங்குள்ள நிறைய பேருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. மகிழ்ச்சியாக இருப்பதற்கு கடவுளை வணங்க வேண்டாம். பொருளாதாரம் தவிர எனக்கும் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அதனை சமாளிப்பதற்கு கடவுள் மறுப்பு கொள்கை எனக்கு மிகப் பெரிய உதவியாக உள்ளது. ஒரு சிலர் என்னை இந்து கடவுளுக்கும், நம்பிக்கைகளுக்கும் மட்டும் எதிரானவன் என்று நினைக்கிறீர்கள். நான், அனைத்து கடவுள் நம்பிக்கைகளுக்கும் எதிரானவன். சமூக வலைதளங்கள் மூலம் பெரியார் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.