அண்ணாமலையார் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த நடிகை அமலாபால்

திருவண்ணாமலை,
தமிழ் சினிமாவில் ‘வீரசேகரன்’ என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலா பாலை, சர்ச்சை நாயகியாக மாற்றியது ‘சிந்து சமவெளி’ திரைப்படம். இதைத்தொடர்ந்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அமலாபால் நடித்த ‘மைனா’ திரைப்படம் இவருடைய திரை உலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 1 மற்றும் 2, விஷ்ணு விஷாலின் ராட்சசன் என தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறிய அமலா பால் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து சர்ச்சையை கிளப்பினார். அதன் பின்னர் தமிழில் அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. விஜய் சேதுபதியுடன் ஒப்பந்தமான படத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு மலையாளத்தில் பிரித்விராஜ் உடன் அவர் இணைந்து நடித்த ‘ஆடு ஜிவிதம்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 150 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியது அந்த படம்.
தொடர்ந்து தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அமலா பால், ‘தலைவா’ மற்றும் ‘தெய்வத்திருமகள்’ படத்தில் நடிக்கும்போது இப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு, இரு தரப்பு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான நான்கு வருடங்களில், இருவரும் ஒருமித்த மனதுடன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர். அதன் பின்னர் தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை அமலாபால் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தனது குழந்தை மற்றும் குடும்பத்துடன் நடிகை அமலாபால் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் அமைந்துள்ள சம்பந்த விநாயகரை தரிசனம் செய்துவிட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். அமலாபாலுடன் பொதுமக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் என அனைவரும் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.
அமலா பால் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.