“பராசக்தி” திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

“பராசக்தி” திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு


சென்னை,

நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10 ம் தேதி திரைக்கு வர உள்ளது.

தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 1965ம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போரை மையமாக வைத்து, செம்மொழி என்ற பெயரில் கதையாக எழுதி, 2010 ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் கட்ச்ந்த 2010 ம் ஆண்டு பதிவு செய்த இந்த கதையை, பல தயாரிப்பாளர்களிடம் கொடுத்ததாகவும், தயாரிப்பாளர் சேலம் தனசேகரன், தனது கதையை நடிகர் சூர்யாவிடம் கொடுக்க, அவர் அதை இயக்குனர் சுதா கொங்கராவிடம் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். பின்னர், புறநானூறு என்ற பெயரில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட படம், தனது செம்மொழி கதை எனவும், கைவிடப்பட்ட அந்த படம், தற்போது, பராசக்தி என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

தனது கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 2025 ம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், பராசக்தி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். செம்மொழி கதையையும், பராசக்தி கதையையும் ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இரு கதைகளும் ஒன்று தானா? இல்லையா? என்பதை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறி, மனுவுக்கு ஜனவரி 2 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, பராசக்தி பட இயக்குனர் சுதா கொங்கரா, தயாரிப்பாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், மனுதாரரின் புகார் மீது அனைத்து தரப்பினரையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில், கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து ஜனவரி 2 ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கு விசாரணையில் ‘செம்மொழி’ படத்தின் கதையை திருடியதாக இணை இயக்குநர் ராஜேந்திரன் எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என ‘பராசக்தி’ தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு தடைவிதித்தால் பெருத்த இழப்பு ஏற்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘பராசக்தி’ படம் தயாரிப்பு குறித்து 2024ம் ஆண்டு தகவல் தெரிந்தும் 2025 டிசம்பர் மாதம்தான் மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார் என கூறி படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.மேலும் ‘பராசக்தி’ படத்தின் கதையையும் செம்மொழி கதையையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி ஏற்கனவே உத்தரவு பிறப்பித்தும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யவில்லை என்பதால், அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *