சமூக வலைதளங்களில் இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை

சென்னை,
1976-ம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் 10,000-க்கு அதிகமான பாடல்களை உருவாக்கியும் உள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ள இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது, பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் ஆகியவை இளையராஜாவின் பாடலையும், புகைப்படங்களையும் அனுமதியில்லாமல் பயன்படுத்தி வருவதாகவும் , அதனை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், அதிலிருந்து கிடைத்த வருமானம் தொடர்பான தகவல்களை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இளையராஜாவின் புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.






