‘கசிவு’ படத்தில் நடித்தது எனக்கு இன்னொரு தேசிய விருது கிடைத்தது போலதான்- எம்.எஸ்.பாஸ்கர் | Acting in the film ‘Kashivu’ was like winning another National Award for me

சென்னை,
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் ‘கசிவு’ என்ற நாவல், அதே பெயரிலேயே படமாகி இருக்கிறது. தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், விஜயலட்சுமி, ஹலோ கந்தசாமி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை செண்பகவல்லி இயக்கியுள்ளார். வெற்றிச்செல்வன் தயாரித்துள்ளார். பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை அள்ளிய ‘கசிவு’ படம் ஓ.டி.டி.யில் நேரடியாக வெளியாகி இருக்கிறது.
சென்னையில் நடந்த இந்த பட விழாவில் எம்.எஸ்.பாஸ்கர் பேசும்போது, ‘‘ஆதாயத்துக்காவும் நடிக்க வேண்டும். ஆத்ம திருப்திக்காகவும் நடிக்க வேண்டும். அப்படி ஆத்ம திருப்திக்காக நடித்த படம் தான், ‘கசிவு’. சொர்க்கம், நரகம் என்பது நாம் இறந்த பின்பு கிடையாது. இங்கேயே தான் இருக்கிறது. செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இப்படிப்பட்ட படம் பார்ப்பதால் எல்லோரும் திருந்திவிட முடியாது. எவ்வளவோ சட்ட திட்டங்கள் வந்துவிட்டாலும் முன்பைவிட குற்றங்கள் அதிகமாகத்தான் நடக்கின்றன. எனக்கு இதுபோல நல்ல நல்ல கதாபாத்திரங்களாக தாருங்கள். என் நடிப்பை இன்னும் நான் மெருகேற்றிக் கொள்கிறேன். எழுத்தாளர் பூமணியின் எழுத்துக்களை பேசி நடித்ததே எனக்கு இன்னொரு தேசிய விருது கிடைத்தது போல தான்”, என்று குறிப்பிட்டார்.






