“பைசன்” படத்தின் டிரெய்லரை பாராட்டிய பிரபல இசையமைப்பாளர்

மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
‘பைசன்’ படம் அக்டோபர் 17ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. 5 ஸ்டார் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதையடுத்து படத்தின் டிரெய்லர் நேற்று இரவு 8 மணிக்கு வெளியானது. தென் மாவட்டத்தில் இருந்து கபடி போட்டியில் ஜெயிக்க போராடும் ஒரு இளைஞனின் வாழ்க்கை அரசியல், பகை, சமூகம் காரணமாக என்னவானது என்பதை டிரெய்லர் பேசியிருந்தது. படத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் ‘பைசன்’ படத்தின் டிரெய்லரை பாராட்டியுள்ளார்.தனது எக்ஸ் பக்கத்தில் “டிரெய்லரில் சிறப்பான காட்சிகள், தயாரிப்பு பணிகள், இசை மற்றும் நடிப்பு தெரிகிறது. பைசன் படம் ஒரு முக்கிய விளையாட்டு படமாக இருக்கும். ஜெயிச்சிடு கபிலா…” எனக் குறிப்பிட்டு பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், துருவ் மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘ஜெயிச்சிடு கபிலா’ என்ற வசனம் சந்தோஷ நாராயணனும் பா. ரஞ்சித்தும் இணைந்து பணியாற்றிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வரும் வசனம் என்பது நினைவுகூரத்தக்கது.