அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய்

சென்னை,
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், ‘ரெட்ட தல’ படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இவர் நடித்த ‘இட்லி கடை’ படம் மக்கள் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடியில் நடைபெற்ற ரத்ததான முகாமில், இளைஞர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் ரத்த தானம் செய்துள்ளார். உதிரம் கொடுத்து உயிரை காப்போம், மரங்கள் நட்டு மண்ணை காப்போம் எனவும் பேசியுள்ளார்.