மலையாள நடிகர் ஜின்டோ மீது வழக்குப்பதிவு: காரணம் என்ன…?|Case registered against Malayalam actor Jinto: What is the reason…?

பெரும்பாவூர்,
மலையாள நடிகர் ஜின்டோ. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று உள்ளார். அவருக்கு சொந்தமாக கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள வெண்ணிலா பகுதியில் உடற்பயிற்சி நிலையம் உள்ளது. இதனை அவர் ஓராண்டுக்கு வாடகைக்கு கொடுத்து இருந்தார். இந்த வாடகை ஒப்பந்தப்படி, வருகிற அக்டோபர் மாதம் வரை உடற்பயிற்சி நிலையம் வாடகைக்கு விடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஜின்டோ மாற்று சாவியை பயன்படுத்தி உடற்பயிற்சி நிலையத்தை திறந்து, உள்ளே அலுவலக அறையில் இருந்த ரூ.10 ஆயிரம், ஆவணங்களை எடுத்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து உடற்பயிற்சி நிலையத்தை நடத்தி வருபவர் பாலாரி வட்டம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர். இதில் நடிகர் ஜின்டோ மாற்று சாவி மூலம் உடற்பயிற்சி நிலைய அலுவலகத்தை திறந்து பணம், ஆவணங்களை எடுத்து சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






