சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன்- ஏ.ஆர்.முருகதாஸ்

சென்னை,
பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார். மதராஸி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதற்கிடையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கலந்து கொண்டார். அப்போது, சிவகார்த்திகேயன் குறித்து எழுப்பிய கேள்விக்கு நெகிழ்ச்சியாக பதில் அளித்துள்ளார்.
அதாவது, “மான் கராத்தே படத்தின் போது, தொலைக்காட்சியில் இருந்து வந்த ஒரு நடிகராக சிவகார்த்திகேயனை நான் கண்டேன். அந்த சமயத்தில் அவர் 6 படங்களை பண்ணியிருப்பார். எந்தவொரு பேக்ரவுண்டும் இல்லாமல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என வரும் பல நடிகர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக மாறியுள்ளார். திறமையும், கடின உழைப்பும் இருந்தால் போதும் ஜெயிச்சிடலாம் என்பதற்கு சிவகார்த்திகேயன்தான் ஒரு நம்பிக்கை. மதராஸி படத்திற்காக அவரை பார்த்து பேசும்போது அவருடைய வளர்ச்சி பாசிட்டிவா இருந்தது. சிவகாரத்திகேனின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.