போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு போலீசார் சம்மன்

போதைப் பொருள் விவகாரத்தில் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விசாரணையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திரை உலக பிரபலங்கள் பலர் மீது போலீசாரின் சந்தேக பார்வை வீச தொடங்கி இருக்கிறது. இதையடுத்து திரை உலகில் பலர் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.
போதைப் பொருள் சப்ளை செய்ததாக கைதான பிரதீப் வாக்குமூலத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சப்ளை செய்ததாக கூறி உள்ளார். இதையடுத்து போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் கிருஷ்ணா வும் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையடுத்து நடிகர் கிருஷ்ணாவை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக கிருஷ்ணாவுக்கு போலீசர் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிருஷ்ணா தற்போது கேரளாவில் படப்பிடிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் கிருஷ்ணா கழுகு, வானவராயன், வீரா, கழுகு-2, வன்மம் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கிறார்.